Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (60) - பருத்தித்துறை தரையிறக்கமும், ட்ரோலர் அரசியலும்

பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2021 (வெள்ளிக்கிழமை)

ஆதவன் பக்கம் - பருத்தித்துறை தரையிறக்கமும் ட்ரோலர் அரசியலும்

நியூயோர்க்கில் இருந்து கப்பலில் சிங்கப்பூர் வந்து கொண்டுள்ளோம். வருகின்ற வழியில் 4 தினங்கள் முன்பு செங்கடலில் ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் (Man over board), 7 தினங்கள் முன்பு மெடிட்டரேனியன் கடலில் (ஸ்பெயினின் தெற்கு கடல் பகுதியில்) ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும், அவர்களைத் தேடும் படலம் (Rescue operation) தொடர்வதாகவும், குறித்த பகுதிகளின் வழி பயணிக்கவேண்டாம் என்றும் இப்பகுதிகளில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பப்பட்டது.

எனது முதல் தர அதிகாரியுடன் இதுபற்றி (அதாவது ஏன் அடிக்கடி ஆட்கள் கடலில் வீழ்கிறார்கள்) கதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவர் தான் அறிந்த இரண்டு சம்பவங்களை கூறினார்.

முதலாவதில், Arm Guard ஒருவர் தனது ஆயுதங்களை அணிந்த வண்ணம் கப்பலின் ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளார். கப்பல் ஆடும் பொழுது அவர் விழுந்துவிட்டார். ஆயுதங்களை அணிந்திருந்ததால், அவருக்கு நீந்தத் தெரிந்திருந்தாலும் தப்ப வாய்ப்பில்லை.

இரண்டாவது சம்பவத்தில் சிறிய கப்பலில் இன்னொமொருவர் தடுமாறி கடலில் விழுந்துள்ளார். ஆட்கள் விழாத வண்ணம் கப்பல்களில் அமைக்கப்படும் பாதுகாப்பு கம்பிகள் (Safety Railings), சிறிய கப்பல்களில் பொதுவாக குறைவான உயரத்தில் அமைவதே வழமை.

இப்பொழுது எங்கள் சம்பவத்துக்கு வருவோம்

கடந்த 5 தினங்கள் முன்பு, முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறைக்கு ‘படகுகள் கண்டன அணிவகுப்பு’ ஒன்று இடம்பெற்றது. இதில் மீனவர்களுடன் கூட்டமைப்பு அரசியற் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் எல்லாம் ‘படகுகள்’ (Boats) வகையைச் சாரந்தவை ஆகும். இவ்வைகையான படகுகளில், நான் மேலே விவரித்துள்ள பாதுகாப்பு கம்பிகள்  (Safety Railings) என்ற ஒன்றும் இல்லை. ஆகவே பயணிப்பவர்கள் படகுக்கு  உள்ளே தான் பாதுகாப்பாக நிற்க வேண்டும்.

ஆனால் கடந்த படகுகள் கண்டன அணிவகுப்பு சம்பவத்தில், வியப்பூட்டும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மேல் தட்டில் - அதுவும் ஒரு பக்கமாக, மேலும் குறித்து சொல்லும் படியாக சேலையுடன் அமர்ந்திருந்தார். ஆடவ அரசியற் பிரமுகர்கள் பலர் வேட்டியுடன் பயணித்துளார்கள்.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளிகளின் பிரகாரம், பயணித்தவர்களில் மொத்தம் நால்வர் மாத்திரம் பாதுகாப்பு அங்கி (Life vest) அணிந்துள்ளார்கள். 

சம்பவம் இடம்பெற்றது வங்காள விரிகுடாவில். வங்காள விரிகுடா இந்திய சமுத்திரத்துடன் தொடர்புடையது. ஆகவே இது கடல் அலைகளுக்கும் ஆழி அலைகளுக்கும் எந்த நேரமும் உட்படக் கூடியது.

இவற்றில் என்ன பெரிதாக சுட்டிக்காட்டவுள்ளன என்ற கேள்வி எழக் கூடும்.

சேலை கட்டி, பாதுகாப்பற்ற முறையில் அமர்ந்திருந்த பெண்மணி ஒரு வேளை விழுந்திருந்தால், அவர் தப்புவதற்குரிய சாத்தியம் மிகக்குறைவு. ஏனெனில் வடக்கில் ‘முற்றாக இல்லை’ என்று கூறுமளவுக்கு பெண்களுக்கு நீந்தத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டியிருந்தது சேலை வேறு.

அதுபோல் வேட்டியுடன் கடலில் பயணித்து – ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, ஆடவ அரசியற் பிரமுகர்களும் தமது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

‘மீனவர்கள் சாரத்துடன் தானே வந்தார்கள்’ என்று கேட்கக்கூடும். மீனவர்களைப் பொறுத்தவரை சாரம் என்பது மேலதிகமாக அணியப்படும் ஒன்றுதான். அவர்களின் பிரதான உடை என்பது காற்சட்டை (அல்லது அதற்கு ஒத்த) ஒன்று தான். ஆபத்து என்று வரும் போது சாரத்தைக் கழற்றி எறிந்து விட்டு,   காற்சட்டையுடன் இயங்கத் தொடங்கி விடுவார்கள் மீனவர்கள்.

இரண்டு விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது இந்தக் கண்டனப் பேரணியின் பிரதான நோக்கங்களில் ஒன்று பிறரின் - குறிப்பாக மேலைத்தேய நாடுகளின் (தூதுவர்கள் வழி) கவனத்தை இழுப்பது. எமது போராட்டம் இந்த ஒன்றை இலக்கு வைத்து தானே நடாத்தப்படவேண்டியுள்ளது.

மேலைத்தேய நாடுகள்   பாதுகாப்பு பொறிமுறைகளுக்கு மிகவும் முன்னுரிமை கொடுப்பவர்கள். இவ்வாறு வேட்டியுடனும், சேலையுடனும் படகுகளில் அரசியல்வாதிகளை பார்க்கும் போது, ‘இவர்களா மக்கள் பிரதிநிதிகள்’ என்றும் தமக்குள் கேட்டுக் கொள்ளக்கூடும்.

இரண்டாவது உயிர்ப்பலி.

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கிளாலி வழியாக படகு ஒன்றில் 14 பேர் பயணித்தார்கள். காற்று சற்று வேகமாக, இருந்தவர்கள் அல்லோல கல்லோல பட, படகு கவிழ, படகில் இருந்த 10 பேர் பரிதாப மரணம் அடைந்தார்கள்.

நீந்தத் தெரிந்த 4 பேர் தப்பித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் தாய் ஒருவர் (சேலையுடன்) தனது இரண்டு பிள்ளைகளை கட்டிப் பிடித்தபடி பிரேதமாக மீட்கப்பட்டார்.

இறந்தவரில் இன்னும் ஒருவர் எனது கூடப் பிறந்த சகோதரி.

அந்தக் காலம் – கண்டோஸ், கோட்டெக்ஸ் போன்றவைக்குக் கூட முழுத்தடை - பாதுகாப்பு அங்கி என்ற பேச்சுக்கே அன்று இடமில்லை.

கிளாலியில் இவ்வாறு பலர் பரிதாபமாக உயிர்ப்பலியானார்கள்.

கிளாலியில் பலியான எனது சகோதரி இளவேணி  

நீச்சலும் தெரிந்து, பாதுகாப்பு அங்கியும் அணிந்து, சரியான துணிமணிகள் அணிந்திருந்தால் எனது சகோதரி உட்பட பலர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

பெரியவர்கள் அடிக்கடிகூறும் ஒன்று ‘நெருப்புடனும் நீருடனும் விளையாடக் கூடாது’ என்று. 

இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். இலங்கை கடலோர பாதுகாப்பு விதிகளின்படி, தற்போது பாதுகாப்பு அங்கி இன்றி படகுகளில் பயணிப்பது சட்டப்படி குற்றம்.

சரி இனிமேல் ட்ரோலர் அரசியலுக்குள் வருவோம்.

ட்ரோலர் பிரச்சனை என்பது 2009 இலிருந்து, கடந்த 12 வருடங்களாக கூடியோ குறையாமல் உள்ள ஒரு பிரச்சனை தான். இதற்கு இப்பொழுது மட்டும்  இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலருக்கு விளங்கும், சிலருக்கு விளங்காது. பலருக்கு இது தேவையற்ற விடயம்.

முதலாவது பிரச்சனை

வடக்கை பொறுத்தவரை ட்ரோலர் பிரச்சனை என்பது இரண்டு வகை.

முதலாவது இங்கு மீனவர்களுக்குள்ளேயே உள்ள பிரச்சனை. அதாவது இங்கு குறிப்பாக யாழ்பாணத்தில் சிறுதொழில் மீன் பிடி, ரோலர் மீன் பிடி என்ற பிரதான இரண்டுடன், ஆழ்கடல் மீன் பிடி என்று 3 வகை உண்டு.

இதில் ‘ஆழ்கடல் மீன்பிடி’யில் ஈடுபடுகிறவர்கள் மிகக்குறைவு, அத்துடன் சிக்கல்கள் அதாவது அரசியல் இல்லாத ஒன்று. ஆகவே அதனை ஒரு புறம் தள்ளி வைப்போம்.

எஞ்சிய இரண்டில், சிறுதொழில் மீன் பிடியை எடுத்துக் கொண்டால், சிறு தொழில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எண்ணிக்கைதான் இங்கு அதிகம்.

சிறு தொழில் மீன்பிடியில் படகுகள் பாவிக்கப்பட்டு, கடலின் மடிக்கு (Sea bed) சேதாரம் இல்லாமல் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

ஒரே பகுதியில் அத்தான் ரோலர் தொழில் ஈடுபடும் அதேவேளை, மச்சான் சிறு தொழிலில் ஈடுபடுவதை இங்கு சாதாரணமாக பார்க்க முடியும். அதாவது சிறு தொழில் மீன் பிடி, ரோலர் மீன் பிடி கலந்தே உள்ளன.

ரோலர் மீன்பிடியில் வள்ளங்கள் பயன்படுத்தப்பட்டு, பெரும்பாலும் கடலின் மடி வழிக்கப்பட்டு, மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

ரோலர் மீன்பிடியில் முறையினால் கடலின் மடி சேதப்படுத்தப்படுகின்றது இதனால் கடற்சூழல் (Eco System) பெரிதும் பாதிக்கப்படுகின்றது, அதாவது மாறுதலுக்கு உள்ளாகின்றது. மீன் வளம் அழிகின்றது என பிரதானமாக  குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் அவ்வப்போது சிறு தொழில் செய்பவர்களின் வலைகளும், ரோலர் மீன்பிடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

ரோலர் முறையில் 2 கூடை மீன் பிடிக்கப்படும்போது, கிட்டத்தட்ட 1 கூடை கடல் வாழ் உயிரினங்கள் ‘தேவையற்வை’ என கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றன. இவற்றில் மீன் குஞ்சுகளும் அடக்கம். ஆக எண்ணிக்கையில் பார்த்தால் கரைக்கு கொண்டுவரப்படும் மீன்களை விட, கொட்டப்படும் மீன்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதுவும் சிறுபிடி மீனவர்களைப் பாதிக்கின்றது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். மீன் வளம் காலப்போக்கில் முற்றாக அழிந்தவிடும் என்கிறார்கள்.

சரி ‘இதெல்லாம் உண்மைதானா’ என்றால், ‘முற்றுமுழுதாக உண்மைதான்’. இதனை நான் நேராகவே பார்த்து ஆவணப்படுத்தியுமுள்ளேன்.

இவ்வாறான ரோலர் முறையால், மீன் வளம் அழிந்த கடற்பகுதிகளாக  தமிழகத்து கடற்பிரதேசங்களை உதாரணமாக கூறலாம். அங்கு மீன் வளத்தை பாதுகாக்கக் கூடிய எந்தவித பொறிமுறைகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்காக சிலர் கூறுவது போல் ரோலர் தொழில் ஏதோ தவறான தொழில் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. தமக்கு தெரிந்த (ரோலர்) தொழிலை கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்டவர்கள் செய்துவருகின்றார்கள். அன்று ரோலருக்கான தடைச்சட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆகவே இன்று அவ்வாறானதொரு தடைச்சட்டத்தைப் போட்டுவிட்டு ரோலர் தொழில் செய்பவர்களை குற்றவாளிகள் போல் பார்க்க முடியாது.

இந்த ஆண்டு வரை இரசாயன உர தடை இருக்கவில்லை. விவசாயிகள் இரசாயன உரத்தை தாராளமாக பாவித்தார்கள். இன்று இரசாயன உரம் ஒரு உயிர் கொல்லி என்று தெரிகின்றது. ஆகவே இதே சட்டத்தை சுட்டிக்காட்டி நாளை இரசாயன உரங்களை பாவிக்கும் விவசாயிகளை குற்றவாளிகளாகவா பார்க்கப் போகின்றார்களா?

இரசாயன உரத்தை தான், தாங்கள் பாவிக்க விரும்புகின்றோம் என கிட்டத்தட்ட ஓட்டு மொத்த விவசாயிகளும் களத்தில் இறங்கியுள்ளார்கள். அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க் கட்சியினரும் இதில் விவசாயிகளுடன் கூட்டு சேர்கிறார்கள்.

சேதன பசளை என்ற மாற்றீடு ஒன்று இருந்த போதும், மண்வளம் தெரிந்து கொண்டே இரசாயன உரம் கொண்டு அழிக்கப்படுகின்றது.

தேற்றம், ரோலர் தொழிலாளிகளுக்கு ஒருவாறாகவும், விவசாயிகளுக்கு வேறு மாதிரியும் உள்ளது. அதாவது கடல் வளத்தை பாதிக்கும் ரோலர் தொழிலை நிறுத்த வேண்டும். ஆனால் மண் வளத்தையும் மனித குலத்தையும் அழிக்கும் இரசாயன உரத்தைப் பாவிக்க அனுமதிக்க வேண்டும். என்ன நியாயம்? என்ன போராட்டம்?

ரோலர் தொழிலை நாங்கள் தொடரவில்லை. மாறாக எங்களுக்கு ஒரு மாற்று தொழிலை தாருங்கள் என்கிறார்கள் ரோலர் மீனவர்கள். 

கடல் வளம் அழிகின்றது எனக் கூறுவதற்கு சிறு தொழில் மீனவர்களுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோ யோக்கியதை இல்லை. மீன் பிடிப்பதற்காக உபயோகப்படுத்தும் பெற்றோலிய எண்ணைக் கழிவுகளை, மீனவர்கள் எங்கே கொட்டுகிறார்கள்? இதைப் பற்றி விலாவாரியாக எழுத எனக்கு தகமை உண்டு, ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் மீனவர்களோ அல்லது அரசியல் வாதிகளோ இல்லை.

யாழ் மாவட்டத்திலே ரோலர் தொழிலில் இன்னும் ஒரு உப பிரிவு.

பாக்குநீரிணைய ஒட்டி யாழ்பாணத்தின் வட கரையோரத்தில், (வல்வெட்டித்துறை, பருத்தித்துறை போன்ற பிரதேசங்கள்)  ரோலர் தொழில் செய்பவர்கள், தமது தொழிலை ஆகஸ்ட் முதல் மார்ச் வரையே செய்கிறார்கள். ஆனால் யாழ்பாணத்தின் குருநகர் போன்ற யாழின் தெற்கு பகுதிகளில்  உள்ளவர்கள் வருடந்தோறும் ரோலர் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள்.

ரோலர் தொழில் செய்வது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

தடையக் காரணம் காட்டி (குருநகர் தவிர்ந்து) யாழின் வட கரையோரத்தில் மட்டும் (வல்வெட்டித்துறை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில்) அவ்வப்போது ‘ரோலர் மீன்பிடியில் ஈடுபடக் கூடாது’ என்று தடுக்கப்படுகின்றது. காரணம் அரசியல் (என்கிறார்கள் மீனவ நண்பர்கள்)

ரோலர் – சிறு தொழில் மீன் பிடி பிரச்சனை இன்றோ நேற்றோ தோன்றிய ஒன்று அல்ல. இது இயக்கம் இருந்த காலத்திலே இருந்த பிரச்சனை தான். இயக்கம் பிரச்சனை பெரிதாக வளரவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.

இரண்டாவது பிரச்சனை

தமிழக மீனவர் ரோலர்களின் அத்து மீறல் தொல்லை. இதுதான் அதிகம் சர்ச்சையானதும் விவாதிக்கப்படுவதும் ஆகும்.

தமிழக மீனவர்களின் ரோலர்களின் எண்ணிக்கை, அதன் அளவு, தரம் போன்றன எல்லாமே ஒப்பீட்டு அளவில்..... இங்குள்ளவற்றுடன் ஒப்பிட முடியாதவை. அவர்களின் தமது கடற்பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னரே மீன் வளத்தை வருடிவிட்டார்கள்.

சண்டை முடிந்தது அவர்களுக்கு வாய்ப்பாக மாற, அவர்கள் இங்கு எமது கடற் பகுதிகளுக்குள் பிரவேசிக்க தொடங்கியிருந்தார்கள். அதாவது குறித்த தமிழக மீனவர் எல்லை தாண்டல் பிரச்சனையும் கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் ஒன்று தான்.

கடந்த 2 வருடங்கள் முன்பு என்னுடன் தமிழகத்தின் கன்னியா குமரியைச் சேர்ந்த போசன் (Bosun) ஒருவர் பணி புரிந்தார். ‘தான் விடுமுறையில்  உள்ள காலங்களில் ரோலர் மீன் பிடிக்கு செல்வதாக’ கூறினார்.

அவரிடம் கேட்டேன், எமது கடற்பகுதிகளுக்குள் நீங்கள் மீன் பிடிக்க வருவது உண்டா’ என்று. ‘ஆம்’ என்றார்.

‘பிழை தானே’ என்றேன்.

‘பிழை தான் சார் என்ன செய்வது எங்கள் பகுதியில் மீன்கள் இல்லை, வேறு வழியில்லை. கடலுக்கு எல்லை இல்லை. உங்கள் மீனவ்ர் எமது பகுதிக்குள் வரலாம், நாங்கள் உங்கள் பகுதிக்கு வந்து மீன் பிடிப்போம்’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அகதிகளாக அடைக்கலம் கொடுத்தோம், கல்வி கற்க வசதி கொடுத்தோம், எங்கள் நிலங்களில் தொழில் புரிய அனுமதித்தோம், அரச மட்டத்தில் ஏராளமான நிதி, பொருள் உதவி செய்து கொடுத்துள்ளோம், இயக்கங்களுக்கு உதவியுள்ளேம்..... இவ்வாறு ஏராளமாக செய்துள்ளோம். எல்லாவற்றையும் பெற்ற நீங்கள் வெறும் மீன் பிடிக்க மட்டும் அனுமதிக்காமல் தடுப்பது நியாயமா’? என்றார். மேலும் ‘சுட்டாலும் பரவாயில்லை, நாம் வந்து தான் ஆவோம். ஏன் என்றால் இது எங்கள் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்டது, எம்மிடம் மீன் இல்லை’ என்றார். அவர் கூறியது தான் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குண்டடி இடம்பெற்ற போது தமிழகத்துக்கு அதிகம் இடம்பெயர்ந்தவர்கள், இலங்கையின் வடக்கு கிழக்கு கரையோரப் பகுதிகளில் இருந்த மக்கள் தான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

மேலே விவரித்துள்ள இரண்டு பிரச்சனைகளில் கடந்த நாட்களில் பேசப்பட்ட பிரச்சனை – தமிழக மீனவர் அத்துமீறல் தான்.

மீனவர் போராட்டங்கள், தினசரிப் பத்திரிக்கைகள், சமூக வலைத் தளங்கள் இதற்கு சான்று.

படகு கண்டனப் பேரணிக்கு 2 தினங்கள் முன்பு, பருத்தித்துறை மீனவர்கள்,  இந்திய மீனவர் அத்துமீறல் பிரச்சனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் அவர்கள் ஒரு படி மேலே சென்று, ‘இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இன்றி தமிழ் அரசியல்வாதிகள் இங்கு வந்தால் கால் கை உடைப்போம்’ என்றும் கூறியிருந்தார்கள்.

இந்த வகையில் நோக்கும் போது, நடைமுறையில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு / போராட்டத்துக்கு, மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் தாமும் ஆதரவு கொடுத்து வலுச்சேர்ப்பது என்பது வழமையான ஒன்று தான்.

படகுகள் கண்டனப் பேரணிக்கு  முதல் நாள், முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை  ‘தமிழக ரோலர்கள் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான்’ (எங்கள் கடல் எங்களுக்கே) போராட்டம் என்பது போன்ற செய்திகள் வந்ததை பார்த்தேன்.

ஆனால் பேரணியின் முடிவில், சில தமிழ் படங்களைப் போல் முடிவு 90 பாகை மாறி ‘ரோலர் தடையை அமுல்படுத்த வேண்டும்’ என்று முடித்துவிட்டார்கள்.

அதாவது பழைய படத்துக்கு புதுத் தலையங்கம் கூட போடாமல், இடைக்கால படத்தின் தலையங்கத்தை போட்ட மாதிரி ஆக்கிவிட்டார்கள்.

 

சரி, இவ்வாறான நாட்பட்ட பிரச்சனையை புதுப்பிரச்சனை போல் சுமந்திரன், சிறீதரன், சாணக்கியன் போன்றோர் முல்லைத்தீவில் ஏற்றி பருத்திதுறையில் தரையிறக்கம் செய்தது ஏன்?

அரசியல் தான்.

கடந்த தேர்தலில் அமைச்சர் தேவானந்தா தனது வாக்கு வங்கியை அப்படியே தக்கவைத்துக்கொள்ள, இணை அமைச்சர் அங்கஜன் சக்தியை அதிகம் செலவழித்து அதிக விருப்பு வாக்குப்பெற்று யாழின் ஹீரோ ஆனார்.

நாங்கள் கொடுக்கும் வரிகள், இங்கு – எமது பகுதிகளுக்கு செலவினங்களுக்காக கொழும்பில் இருந்து அனுப்பப்பட, அதை இவர்கள் இருவரும் ஏதோ தங்கள் தயவில் உருவகம் பெற்ற நிதி போல் உருவகப்படுத்தி, பலரின் மனதை கொள்ளை கொள்கிறார்கள். அதாவது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்கின்றார்கள்.

சாதாரண கணக்குப் பார்த்து, அதில் இருந்து பெரும்பான்மை அரசியலைக் கழித்து, எனது தாயாரிடம் கூறியிருந்தேன் ‘இன்னும் ஓரிரு வாரங்களில் யாழுக்கு கொரொனா ஊசி வரும்’ என்று.

நான் எதிர்பார்த்தபடியே ஊசியும் வந்தது, ஆனால் ஒரு தலையங்கத்துடன், அதாவது ‘அங்கஜனின் முயற்சியால் யாழுக்கு கொரொனா ஊசிகள்' என்று.

சில நாட்கள் கழிந்து மேலும் ‘சில ஆயிரம் கொரொனா ஊசிகள் அமைச்சர் தேவானாந்தாவின் முயற்சியால்’ என்று.

அப்படி என்றால் இவர்கள் இருவரும் முயற்சிக்காது விட்டிருந்தால் யாழ்ப்பாணத்துக்கு கொரொனா ஊசி வராமலே விட்டிருக்கும் போலும்.

எனக்கு தெரிந்தவரை தென் பகுதிகளில் இவ்வாறு அமைச்சர் ஒருவரின் முயற்சியால் கொரொனா ஊசிகள் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு சென்றதாக தெரியவில்லை.  

கூட்டமைப்புக்கு மேற்கூறியதைப் போல 'தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற' மாதிரி – அதாவது அரசின் நிதி உதவிகள், ரோடு போடுதல், கொரொனா ஊசி........ போன்ற, நமது மக்களின் மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய – மக்கள் முன்பு கொடுக்கக்கூடிய  ஒன்றும் சாத்தியம் இல்லை. ஏனெனில் எம்மில் பெரும்பாலானோர் 'அட இவர் நல்லா கொடுக்கிறார் எங்களுக்கு' என்ற ரீதியில் வாக்கைப் போடுகிறார்கள்.

ஆகவே கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியை மாற்ற பெரிதாக ‘பலது’ தேவைப்படுகின்றது.

அதன் ஒரு கட்டம் தான் இவர்கள் முன்னெடுத்திருந்த ரோலர் அரசியல். பல வருடங்களாக உள்ள பிரச்சனையை, நேற்று முளைத்த பிரச்சனை போல் காட்ட முனைந்திருகிறார்கள்.

தென்னிலங்கை மீனவர் விடயம்

தென்னிலங்கை மீனவர் அத்துமீறல், கொட்டில் போட்டு கடல் அட்டை பிடிப்பு, சுருக்கு வலை, டைனமைற் போன்ற தடை செய்யப்பட்ட வழிகளில் மீன் பிடிப்பு........ என நீண்டதாக குரல் எழுப்பிக் கொண்டிருந்த இந்த விடயம், ஏதோ இதுவரை இடம்பெறாத விடயம் மாதிரி இந்தப் போராட்டத்தின் போது காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களே அதுவும் சட்டம் தெரிந்தவர்கள் இந்த முற்றாக தவிர்க்க, நான் மட்டும் மேலும் இதுபற்றி கதைத்து வில்லங்கத்தை தேடவேண்டும்?.

ஒன்றை உற்று நோக்க வேண்டும். தமிழக – எமது மீனவர்கள் கை கலப்புக்களில் ஏன் வாள் வெட்டுக்களில் கூட, பல முறை கடலில் ஈடுபட்டு உள்ளார்கள்.

ஆனால் இங்கு ரோலர் வைத்திருப்பவர்களும், சிறு தொழில் மீன்பிடி செய்பவர்களும் ஒரு போதும் (முரண்பாடுகள் இருந்தபோதும்) கை கலப்பிலோ அல்லது வாள் வெட்டிலோ ஈடுபடவில்லை.

முதல் நாள் ‘எங்கள் கடல் எங்களுக்கே’ - தமிழக ரோலர் அத்து மீறலுக்கு எதிராக போராடப் போகின்றோம்’ என கூட்டமைப்பினர் அறிவிக்க எனக்குள் ஒரு ஐயப்பாடு.

ஏன் என்றால் 83 கலவரத்தின் பின், எம்மவர்கள் தமிழகம் ஓடிச்செல்ல, தமிழக அரசு பல சலுகைகளை பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு என்று வழங்க, அவற்றை முடிந்தவரை தமக்கு ஆதாயமாக்கியவர்கள் தமிழ் அரசியல் வாதிகள் பலர்.

84 ஆம் ஆண்டு அண்ணா யூனிவேர்சிற்றியில், இரண்டு மெடிக்கல் சீற்றுக்கள், கோட்டா அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு என்று அறிவிக்க, அவற்றை பாதிக்கப்படாத தமது நெருங்கிய இருவருக்கு என வாங்கி கொடுத்தமை போல்........ ஏராளம் இவர்களிடம் உண்டு.

ஒன்றைக் கவனியுங்கள் – படகு கண்டனப் பேரணியில் பல கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் மிஸ்ஸிங். அவ்வாறு கண்டனப் பேரணிக்கு வராத அரசிய பிரமுகர்கள், முன்னொரு போது தமிழகத்தில் (தங்கி) இருந்தவர்கள்.

இவ்வாறானதொரு நிலையில் ‘ரோலரை தடை செய்’ என்று நிலமைக்கு ஒட்டாத வகையில் போராட்டத்தை முடிக்க, போராட்டம் பெரிதாக எடுபடவில்லை.

கூட்டமைப்பின் போராட்டம் அமைச்சர் தேவானந்தாவுக்கு தலையிடி என்றாலும், இவர்கள் எதிர்பார்த்தது போல் P2P போல் வெற்றி பெறவில்லை. Same Side இலேயே பலர் கலந்து கொள்ளவில்லை. பல காரணகள் இருக்கக்கூடும். ஒரு காரணம் நிலத்தில் விளையாடுவது போல் கடலில் விளையாடமுடியாது.

(ஆனையிறவை இயக்கம் கைப்பற்றுவதற்காக, திரு. பால்ராஜ் போட்ட ‘பெட்டி’யை பலரும் வியந்து பேசினார்கள். சன்டே டைம்ஸ் 'Fall of Elephant Pass, Rise of LTTE' என்று தனது பிரதான செய்தியாக இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், பால்ராஜ் அவர்களோ ‘குடாரப்பு தரையிறக்கத்தை’ பற்றித்தான் வியந்து பேசினார். அது தான் கடலின் பெருமை. அண்மையில் தான் இந்தக் காணொளியை சமூக வலத்தளம் ஒன்றில் பார்த்தேன்).

P2P சரியான நேர்த்தில், சரியான முறையில் நடாத்தப்பட்டது. இதில் திரு.சாணக்கியனின் பங்கு பிரதானமானது போல் எனக்குத் தென்பட்டது. இதுபற்றி அவருக்கு வாழ்த்துச் சொல்லி செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். அதற்கு பொறுப்புடன் பதில் அளித்திருந்தமையும் என்னைக் கவர்ந்திருந்தது. இந்த விடயத்தை இங்கு நான் பதிவிடுவதற்கு காரணம், ‘நான் கூட்டமைப்புக்கு எதிராக கருத்திடுகின்றேன்’ என்று நீங்கள் கருதிவிடக் கூடாது என்று.

அமைச்சர் தேவானந்தாவுக்கு மீன் பிடி அமைச்சு கொடுக்கப்பட்ட போதே நினைத்தேன் – நல்ல ஒரு பணிஷ்மெண்ட் தான் என்று. ஏன் என்றால்

  1. தமிழக – நமது மீனவர் அடிபிடி
  2. வட பகுதியில் - தென் பகுதி மீனவர் பிரச்சனை
  3. வடக்கில் தமிழருக்கு உள்ளேயே உள்ள ரோலர் – சிறு மீன் பிடி பிரச்சனை  

‘இந்த மூன்று தீராது வலிகளுடன் நீயே சண்டை போட்டுப்பார்’ என்று ஜனாதிபதி தனது புத்திசாலி தனத்தை காட்டி விட்டார் போல்.

மீன் பிடி அமைச்சை பொறுப்பேற்ற பின்னர், தான் பெற்ற புதிய அமைச்சு பற்றி குறிப்பிட்ட அமைச்சர் தேவானாந்தா ‘கயிற்றால் கட்டி கடலில் விட்டது போல் உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

மேற்குறித்த பிரச்சனைகளை கையாள்வது என்பது அமைச்சர் தேவானாந்தா என்ன, எவருக்கும் இலகுவாக இருக்கப் போவதில்லை.

அமைச்சர் தேவானதாவும் ஒரு அரசியல்வாதி. தனது வாக்கு வங்கியை ஒரு போதும் சரியா விடமாட்டார். ரோலர் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வல்வெட்டித்துறை ரோலர் தொழிலார்கள் கடந்த முறை வேலை நிறுத்தம் ஒன்றை அறிவிக்க, அது ஊடாகங்களில் பெரிதாக்கப்பட, உடனடியாகவே தனது முக்கிய பிரதிநிதி ஒருவரை நேரடியாக வல்வையில் மீனவர்களுடன் பேசுவதற்கு அனுப்பி வைத்தார். கொத்தியாலில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், ரோலர் உரிமையாளர் ஒருவர் அழைக்க, நானும் அதில் ஒரு பார்வையாளாராக கலந்து கொண்டேன்.  

இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுவதன் ஊடாக, இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவுத் தளத்தை ஆட்டம் காணவைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும்,  எதிர்பார்ப்புடனும் சிங்களப் பேரினவாதிகள் செயற்படுகின்றனர்.

தமிழ்நாட்டு மீனவர்களையும்,  எமது மீனவர்களையும் மோதவைக்க விரிக்கப்பட்டிருக்கும் சதிவலைக்குள் நம்மவர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – என்கிறார் முன்னாள் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா.

மீனவர்களின் பிரச்சனைக்கு போராட்டாம் தீர்வு என்றால் அதனை இந்தியா கடல் எல்லையில் மேற்கொள்வதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். அவ்வாறு நடைபெற்றால் அதில் தான் பங்கெடுக்க தயாராக உள்ளேன் என்று இணை அமைச்சர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜனிகாந்த், இந்தியாவின் நதிகளை ஒன்றாக இணைத்தால், 'முதலாவது ஆளாக தான் ஒரு கோடி கொடுப்பேன்' என்றார். இதுபோல் தான் மேலுள்ள கூற்றும் உள்ளது போல் எனக்குப்படுகின்றது.

பல இந்தியர்களிடம் கேட்டுப் பார்த்தேன், 'நதிகள் இணைப்பு சாத்தியமா' என்று. 'ஒரு போதும் நடவாது' என்கிறார்கள். 

இந்த வகைப் போராட்டத்துக்குப் போவதற்கு - அதாவது இந்திய எல்லை சென்று போராடுவதற்கு - எந்த Category விசா கொடுப்பது என்று இந்திய விசா அதிகாரிகளும் குழம்பப் போகிறார்கள்.

கஞ்சா கடத்தல் 

தமிழக மீனவர்கள் தொடர்ந்து எமது கடற்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதில் உள்ள  இன்னொரு பெரிய பிரச்சனை கஞ்சா வரவு. கஞ்சா கடத்தலில் பலரின் கைகள் உள்ளன என்று ஐயப்படும் அளவுக்கு கடற்படையால் ஒன்று விட்டு ஒரு நாள் என்ற வகையில் கஞ்சா மீட்கப்படுகின்றது. மீட்கப்படாதவை வேறு கணக்கில்.

பருத்தித்துறை மீனவர்கள் 

பருத்தித்துறை மீனவர்கள் முதல் நாள் ‘தமிழ் அரசியல் வாதிகள் வந்தால் அடிப்போம் என்றார்கள். அடுத்த நாள் அதே அரசியல் வாதிகளின் தரையிறக்கத்துக்கு முண்டு கொடுத்தார்கள்.

பருத்தித்துறை மீனவர்கள் பற்றியும், கதைக்க மறந்த கதை ஒன்று பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

பருத்தித்துறையில் ஆசிய அபிவிருத்தி நிதிப் பங்களிப்புடன் 700 மில்லியன் ரூபா செலவில் பாரிய மீன் பிடித் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருந்தது. ‘இந்தா காசைப் பிடி’ என்ற நிலமைக்கு வந்த இத்திட்டம், பருத்தித்துறை மீனவர்கள் (குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) மற்றும் பருத்தித்துறை மெதடிஸ்ட் கல்லூரி சமூகம் ஆகியவற்றின் தலையீட்டால் கிட்டத்தட்ட கைநழுவிப்போய்விட்டது.

இதனால் இழந்தது பருத்தித்துறையில் அமைக்கப்படவிருந்த மீன் பிடித் துறைமுகம் மட்டு அல்ல. மாறாக வல்வெட்டித்துறை ஆதிகோவில், மற்றும் தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவிருந்த நங்கூர தளங்களும் (Anchorages) தான். ஏனெனில் இவை எல்லாவற்றையும் ஒரே திடத்தின்‌ கீழ், வெவ்வேறு நிதி ஒதுக்கீட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒரே நேரத்தில் அமைக்கவிருந்தது. இது பற்றி இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை.

இது பற்றியும் துணிவு இருந்திருந்ததால் தரையிறக்கத்துக்குப் பின்னர், அதே பருத்தித்துறையில் பேசியிருக்க வேண்டும். பேசவில்லை. பாரிய மீன்பிடித் துறைமுக இழப்பு மீனவர் பிரச்சனை இல்லையா?

700 மில்லியன் ரூபா திட்டம், அதுவும் மீனவர்களுக்காக. எதிர்ப்பைத் தெரிவித்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு இந்த துறைமுகம் தேவையற்றது. தமது குறுகிய நோக்கத்துக்காக தடுத்து விட்டார்கள். ஆக 700 மில்லியன் தெற்குக்குத் தானே போக வேண்டும்? 

இதை மாத்திரம் இழக்கவில்லை நாங்கள். இனிமேல் ஆசிய வங்கி போன்றவர்கள், ஏதும் திட்டத்துக்கு நிதி உதவி என்றால் ‘வில்லங்கம் வராத இடங்களாக பாருங்கள்’ என்று தான் கூறுவார்கள். அது கண்டிப்பாக தென்னிலங்கையாகத் தான் இருக்கும்.

தமிழக – எமது மீனவர் பிரச்சனை பற்றி, இந்திய இலங்கை உயர் மட்ட அளவில் இதுவரை உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கடந்த காலங்களில் தமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளார்கள் என்பதை ஆழநோக்கினால் புலனாகும். 

ரோலர் – தமிழக – தென்னிலங்கை மீனவர் பிரச்சனை என்ற முக்கோண பிரச்சனை இலகுவில் தீர்க்கப் படக் கூடியது அல்ல..

மொத்தத்தில்

முதலாவதான எம்மவர் ரோலர் – சிறுதொழில் மீன்பிடி பிரச்சனை என்பது சில ‘கண்டிப்பான’ தடைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தப்படலாம். அரசியல் தான் இதனை தீர்மானிக்கும்

இரண்டாவதான தமிழக ரோலர் எல்லை மீறல் பிரச்சனை – தமிழக அல்லது இந்திய அரசு சில கண்டிப்பான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமே கட்டுப்படுத்தலாம் – ஆனால் ‘கண்டிப்பு’ களுக்கு அங்கு இடமில்லை. காரணம் ‘Too much demo

மூன்றாவதான தென்னிலங்கை மீனவர் பிரச்சனை – என்பது?

கப்டன் அ. ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)

Email - marinerathava@yahoo.comcarcy'

Face book – athiroobasingam.athavan

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
பெரியதம்பி ராஜ்குமார் (Canada) Posted Date: October 24, 2021 at 20:52 
பயனுள்ள நிதர்சனமான ஆழமான நிறைய அரசியல் சிக்கல்கள் நிறைந்த பதிவு .1972ம் ஆண்டுக்கு பின்னர்தான் இழுவைபடகு வடபகுதிக்கு வந்ததாக அறிந்தேன் .தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்பாடு நிதானமாக கட்டாயம் தீர்க்கப்படவேண்டிய மிக சிக்கலான பிரச்சனை

தெய்வச்சந்திரன் (uk) Posted Date: October 22, 2021 at 14:26 
இக்கட்டுரையில் நிறைய அரசியல்தான் கலந்துள்ளது.ஒன்றுமட்டும், தங்கையின் இழப்பை ஊரமக்களுக்கு இளைய சமுதாயத்துக்கு மீண்டும் தெரிவித்தது. ஆதவன் பக்கம் வல்வெட்டித்துறையின் சிந்தனை வாதிகள் விரும்புவது போல், நாளை ஒரு புத்தகமாக வரவேண்டும்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
நாகபட்டினம் காங்கேசந்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
துள்ளுகுடியிருப்பு ரோமன் க. த. க பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai