உள்ளூராட்சி மற்றும் தேசிய வாசிப்பு மாதம் - 2016 கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி மற்றும் தேசிய வாசிப்பு மாதம் - 2016 இதனுடைய நிறைவுநாள் விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 12.01.2017 ஆம் திகதி வியாழக்கிழமை நகராட்சி மன்ற செயலாளர் திரு.ச .பிரசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திரு .அ. பத்திநாதன் அவர்களும், கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ச. திருமதி. கலைச்செல்வி திலீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கௌரவ வடமாகாண சபை உறுப்பினருமான திரு.ஆ.ம.சிவாஜிலிங்கம் அவர்களும், முன் நாள் நகராட்சிமன்றத் தவிசாளர் திரு. ந.அனந்தராஜ் அவர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் நகராட்சி மன்ற முன்நாள் உறுப்பினர்கள், ஆலோசனைச் சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஊர்ப்பிரமுகர்கள், நிறுவனத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், முன்பள்ளி சிறார்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உள்ளூராட்சி மாதமாகவும், தேசிய வாசிப்பு மாதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டதற்கமைய இக் காலப்பகுதியில் நகராட்சி மன்றத்தினால் பலவிசேட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவைகள், பயன்தரு மரக்கன்றுகள் நடுகை, நகரமையப்பகுதி அழகுபடுத்தல், நகரப்புற வடிகால்கள் சுத்திகரிப்புபணி, பொதுமக்களுடன் இணைந்து மயானங்கள் சுத்திகரிப்பு, வல்வெட்டித்துறை பிரசே வைத்தியசாலையின் அனுசரனையுடன் நடமாடும் வைத்திய சேவை முகாம், கற்பிணி தாய்மார்களிற்கான சத்துணவு வழங்கல், சிறுவர்களிற்கான சத்துணவு வழங்கல், உத்தியோகத்தர் ஊழியர்களின் இரத்ததான நிகழ்வு, Green Army அமைப்புடன் இணைந்து திண்மக்கழிவு முகாமைத்து விழிப்பூட்டல் போன்ற நிகழ்ச்சிகளும், பாடசாலைகளுக்கு இடையிலான பொது அறிவுப்போட்டி பரீட்சை, சித்திரப்போட்டி பரீட்சை, முன்பள்ளி சிறார்களுக்கிடையிலான விளையாட்டுபோட்டி, சனசமூக நிலையங்களுக்கு இடையிலான மென்பந்து கிறிக்கற் சுற்றுப்போட்டி,யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான ஆண்,பெண் இருபாலாருக்குமான தாச்சி சுற்று போட்டி போன்றனவும் நடாத்தப்பட்டிருந்தன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிற்கான பரிசில்கள் இன் நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்தது.
நகராட்சி மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும், நகராட்சி மன்றத்தினால் 2016 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.