Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

"ஈழத்தின் மாமன்னன் பல்லவராயன்" சிலை திறப்பு விழா

பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2024 (புதன்கிழமை)
"ஈழத்தின் மாமன்னன் பல்லவராயன்" சிலை திறப்பு விழா - பல்லவராயன்கட்டு
 
"கி.பி.12ம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுயாட்சியுடைய நகரங்களையும், இராணுவக் கட்டமைப்புகளையும் வைத்து  ஆட்சிசெய்த சிற்றரசர்களுள், பல்லவராயன் வீரத்தின் அடையாளமாக நிற்கிறான்."
 
இலங்கை வரலாற்றில் கிளிநொச்சி  மாவட்டத்தின் தொன்மை பண்பாடு வரலாறு இற்றைக்கு 125000 ஆண்டு பழமையானது குறிப்பாக 1970 ஆம் ஆண்டு இலங்கை தொல்லியல் திணைகளத்தின் கலாநிதி சீரான் தெரனியாகல இரணைமடு குளப்பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கிடைத்த கல்லாயுதம், தொல்பொருட்கள் இற்றைக்கு 1,25,000 ஆண்டு பழமையான குறிப்பிடுகின்றார்.
 
கி.மு.37000 ஆண்டளவில் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த நுண்கற்கால மக்கள் வன்னிப் பிராந்தியத்தில் இரணைமடு, மாங்குளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களிலும் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களிலும் 70 இடங்களில் குடியேறி வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது 
 
இப்பண்பாட்டு வழிவந்த மக்கள் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து முதலில் வட இலங்கையில் குடியேறி வாழ்ந்து பின் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர் என கூறப்படுகின்றது. 
 
கிளிநொச்சி பூநகரியின் மண்டக்கல்லாறு மற்றும் மண்ணியாற்றுப் பகுதியில் 1982, 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளிலும் பார்க்க இரணைமடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த கற்கருவிகள் தொழில்நுட்பம், கலைநயத்துடன் கூடியனவாக காணப்படுகின்றது என பேராசிரியர் புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார் 
 
2000 ஆண்டு பழமையான பெருங்கற்கால குடியிருப்புகள் பூநகரியின் கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு, ஈழவூர் பல்லவராயன்கட்டு, குஞ்சுப்பரந்தன், மாந்தை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது இங்கு பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், ஈமச்சின்னங்கள் ஈமத்தாளிகள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், இந்திய உரோம நாணயங்கள், கல்மணிகள் என்பன நிலையான குடியிருப்புடன் பூநகரி  சிறந்த நகர நிர்மானத்துடனும் நிலையான பொருளாதாரக் கட்டமைப்புடன் கி.மு.3ம் நூற்றாண்டில்  பூநகரி பிராந்தியம் சிறந்த நகர நாகரிக கட்டமைப்புடன்  திகழ்ந்தது என்பதை எடுத்துக் காட்டுகின்றது 
 
பூநகரி கிராஞ்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால மக்கள் பயன்படுத்திய சுடப்பட்ட களிமண்ணை கொண்டு கட்டிய கிணறுகள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திற்குரியதென பூநகரி அகழ்வாய்வில் மூலம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் 
 
2004 ஆம் ஆண்டு பேராசிரியர்  புஸ்பரட்ணம் கல்முனை தொட்டு மாதோட்டத்தின் தெற்கே வீரபாண்டியன் முனைவரையுள்ள பூநகரி பிராந்தியத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வில் பூநகரி 2000 ஆண்டு பழமையான பெருங்கற்கால மக்கள் கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு, பள்ளிக்குடா பல்லவராயன்கட்டு, ஈழவூர், குதிரைகட்டினதீவு போன்ற இடங்களில் பரவி வாழ்ந்தவைக்கான சுடுமண் உருவங்கள், கறுப்பு- சிவப்பு மட்பாண்டங்கள், சுடுமண் பாவைகள், அகல்விளக்கு எழுத்து பொறித்த மட்பாண்டம், நாணயம், கல்மணிகள், மீன்பிடி உபகரணங்கள், கண்டுபிடிக்கப்பட்டது 
 
குறிப்பாக பூநகரி மண்ணித்தலையில் கிடைத்த மட்பாண்ட சாசனத்தில் "ஈலா" எழுத்தை குறித்த மட்பாண்ட பகுதி கண்டுபிடிக்கப்பட்டது இது 2200 ஆண்டு பழமையானதாகும் இதில் இரண்டு எழுத்துக்களை உடைய முதலாவது சாசனம் உடைந்த நிலையில் ‘ஈ” என்ற ஒலிப்பெறுமானம் கொண்ட எழுத்தும், இரண்டாவது மட்பாண்டத்தில் ‘ல” என்ற பெறுமானம் கொண்ட எழுத்தும் காணப்படுவதாகவும், இவ்விரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியை நோக்கும்போது இடையில் வேறு எழுத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பொருந்தக்கூடிய இரண்டு மட்பாண்டங்களையும் சேர்த்து வாசிக்கும் போது முதல் மட்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ஈ” என்ற ஒலியும், இரண்டாவது மட்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ல” என்ற ஒலியையும் சேர்த்து ‘ஈல” அல்லது ‘ஈலெ” என்றும் வாசிக்க முடியும் என்கிறார் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம். 
மேலும் அங்கு கிடைத்த மற்றுமொரு சாசனத்தில் மூன்று எழுத்துக்கள் காணப்படுகின்றன எனவும் இதன் முதலெழுத்திற்கு ‘ஈ” என்ற ஒலிப்பெறுமானமும், இரண்டாவது எழுத்திற்கு ‘ழ” என்ற ஒலிப்பெறுமானமும் கொடுத்து ‘ஈழ” என வாசிக்க முடியும் எனவும் அவ்விரு எழுத்துக்களைத் தொடர்ந்து மூன்றாவது எழுத்து சிறு கோட்டினை மட்டும் கொண்டிருப்பதால் இவ்விரு எழுத்துக்களையும் நோக்கும் போது இது இலங்கையின் புனைபெயரான ஈழத்தையே குறிக்கின்றது என்றும் பேராசிரியர்.பரமு புஸ்பரட்ணம் தனது பூநகரி தொல்பொருளாய்வு நூலில் கூறியுள்ளார். 
 
மேலும் இங்கு காணப்பட்ட எழுத்துக்களை ‘வேளான்” ‘ஈழ” என புகழ்பெற்ற மறைந்த கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் வாசித்ததாகவும், இதன் காலம் கி.மு 2 என அவர் கணித்திருந்ததாகவும், தமிழ் எழுத்தின் தோற்றம் பேரா புஸ்பரட்ணம் எழுதியுள்ளார். இதுவே ஈழ என்ற பெயரிலமைந்த கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் தொல்பொருட்சான்றாகும்.
 
ஈழம் என்பது வட இலங்கை குறிக்கப் பொதுவாக பயன்படுத்தப்பட்ட பெயராகும் பட்டிணப்பாலையில் வரும் "ஈழத்து உணவும் காலகத்து ஆக்கமும்" என்னும் வரிகளில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு உணவு ஏற்றுமதி செய்யப்பட்டவை பற்றி குறிப்பிடப்படுகின்றது 
 
"தெங்கும் பனையும் ஈழவர் ஏறாப்பெறாதாராவும்" என்று சில நிலமானியம் தொடர்பான கல்வெட்டு குறிப்புகளில் வருகின்றன தற்போது வடஈழத்தில் பூநகரில் உள்ள கிராஞ்சி என்ற கிராமம் பொன்னாவெளி முன்னைய காலத்தில் "ஈழவூர்" அழைக்கப்பட்டதை இங்குள்ள ஓலைச்சுவடிகளில் இருந்து அறியப்படுகின்றது.
 
அண்மைக்காலத்தில் "ஈழம்" என்ற பெயர் பற்றி ஆய்ந்தறிந்த அறிஞர்கள் ஈழம் என்பது ஒரு தமிழ் சொல் எனவும் அச்சொல் பனைவளத்தோடு தொடர்புடையதாகவும் தோன்றிய பெயர் எனவும் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகின்றார் ஈழம் என்ற பெயர் பனைவளம் நிறைந்த வட ஈழத்தை அல்லது வட ஈழத்தின் ஒரு பகுதியை குறிக்கும் ஒரு பெயராக இருந்திருக்கலாம் காலப்போக்கில் முழு நாட்டையும் குறிக்கும் பெயராக மாறி இருக்கலாம் என கருத வாய்ப்பு உண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர் 
 
பூநகரியின் பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட நாகபடுவான் கிராமத்தில் கடற்கரை அடுத்துள்ள காட்டுப் பகுதியில் கானாமோட்டை குளக்கட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது சைவசமய அடையாளங்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டது அகழ்வாய்வில் தாழியின் உடைந்த பாகங்கள், பல வடிவங்களில், பல அளவுகளில் அமைந்த மட்பாண்டங்கள், இரும்பு உருவாக்கப்பட்டதன் எச்சங்கள் அதிக அளவிலான சுடுமண் சிலைகள், சிற்பங்கள், என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது 
 
அண்மையில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் பூநகரி கரியாலை நாகபடுவான் அகழ்வாய்வின் போது ஏராளமான சைவ சமய அடையாளங்கள் கடவுள் உருவங்கள், சுடுமண் உருவங்கள், ஆண், பெண் தெய்வ சிலைகள், இலிங்க வடிவங்கள், நந்தியின் பாகங்கள், ஆமை, யானை, கருடன் முதலான சிற்பங்கள் நாக உருவங்கள், தனி சிற்பங்கள், மண்பானைகள், சட்டிகள், தெய்வச் சிலைகள் பீடங்களுடன் இணைந்த வகையில், சில தட்டையான சட்டியின் விளிம்பில் ஐந்து நாகத்தின் தலைகள் 5 நாகத்தையும் இணைந்த நிலையில் அவற்றின் வால் பகுதி சட்டியின் மையத்தில் சுருண்ட நிலையில் காணப்பட்டது இவை அனைத்தும் அண்மைக்காலத்தில் நாகபடுவான் அகழ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவையாகும் இவை நாகவழிபாட்டின் தொன்மையை எடுத்துக்காட்டுவதுடன் 2200  ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருங்கற்கால வழிவந்த மக்கள் நாகவழிபாட்டை மேற்கொண்டனர் என்பது இலங்கையில் பூர்வீக குடிகளான நாகர்கள் நாகபடுவான் மட்டுமல்லாது வடபகுதி தொட்டு தென்னிலங்கை வரை ஏராளமாக பரவி வாழ்ந்துள்ளனர் என்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றது 
 
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாம்பு புற்றை நாக வழிபாட்டிற்குரிய ஆலயமாக வழிபடும் மரபு பண்டுதொட்டு இருந்து வருகிறது வன்னிப்பெரும் நிலப்பரப்பில் ஊற்றுப்புலம், இரணைமடு தென்மராச்சியில் எருவன், வலிகாமத்தில் மானிப்பாய், நாவாலி போன்ற இடங்கள் இன்றும் பாம்பு புற்றுக்கு படையல் செய்யும் மரபு காணப்படுகின்றது சில இடங்களில் கற்களால் அமைக்கப்பட்ட ஆலயத்தின் கருவறையில் பாம்பு புற்றைப் பிரதான தெய்வமாக வைத்து வழிபடும் மரபு காணப்படுகின்றது இக்குலமரவே கரியாலை நாகபடுவானிலும் நிகழ்ந்துள்ளது என்பதையும் இலங்கையின் ஆரம்ப கால மக்கள் நாகவழிபாட்டு வழிவந்த மக்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது
 
* பூநகரியும் அதன் வரலாற்று தொன்மையும்
 
இலங்கையின் ஆதிகால, இடைக்கால வரலாறு தலைநகரங்களையும், அரசவம்சங்களையும் மையமாக வைத்து ஆராயப்பட்டுள்ளது. அதனால் அரச தலைநகரங்கள் காலத்திற்குக் காலம் இடம்மாறும் பொழுது அத்தலைநகரங்கள் அமைந்த பிராந்தியங்களின் வரலாறு அக்காலகட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் பிற்காலத்தில் அரசதலைநகர்கள் தோன்றிய பிராந்தியங்களுக்கெல்லாம் தொன்மையான பாரம்பரிய வரலாறு இருந்ததெனக் கூறமுடியாது.
 
இதேவேளை ஆதிகால வரலாற்றில் தலைநகரங்களாக இருந்த பிராந்தியங்களுக்கு அதே வரலாற்றுப் பெருமை பிற்காலத்தில் இருந்ததெனவும் எடுத்துக் கொள்ள முடியாது. 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்ட அரசொன்று யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில் நல்லூருக்கு மிக அருகில் அமைந்த பூநகரிப் பிராந்தியத்தின் பெரும் பகுதி யாழ்ப்பாண மன்னர்களின் நேரடி ஆதிக்கத்திற்கும், சில பகுதிகள் யாழ்ப்பாண மன்னர்களுக்குத் திறை செலுத்தும் வன்னிச் சிற்றரசர்களின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்ததாகத் தெரிகின்றது, யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த இலக்கியங்களில் இப்பூநகரியும், பூநகரிப் பிராந்தியத்தினுள் இருந்த பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி ஆகிய இடங்களும் யாழ்ப்பாண அரசிற்கு வெளியேயுள்ள நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. 
 
15ம் நூற்றாண்டில் எழுந்த கோகில சந்தேஸய என்ற சிங்களக் குயில் விடு தூதுப் பிரபந்தத்தில் 1450 இல் கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்த செம்பகப்பெருமாளின் (சப்புமால் குமாரய) படைகள் வந்த பாதை வழியாகக் குயில் பறந்து சென்று யாழ்ப்பாணத்தை  அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பறந்து வந்த பாதைகளில் பூநகரியிலுள்ள கல்முனையும் அதையடுத்துள்ள யாழ்ப்பாணமும் கூறப்பட்டுள்ளன.
 
மேலும் அக்காலத்தில் யாழ்ப்பாண அரசைப் பாதுகாத்துக் கொண்டிருந்த உப்புலவன் (விஷ்ணு) ஆலயத்தை இக் குயில் தரிசித்துச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயம் பூநகரியின் தென்னெல்லையில் உள்ள வெள்ளாங்குளத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் சிங்கள இலக்கியங்களில் யாழ்ப்பாண அரசோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ள பூநகரிப் பிராந்தியத்துக்குத் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியம் இருந்ததென்பதை அண்மைக்காலமாக அங்கு கிடைத்து வரும் தொல்பொருட் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
 
* சோழரரட்சியில் பூநகரி
 
வட இலங்கையில் சோழராட்சி தொடர்பான சான்றுகள் மாதோட்டத்தில் கிடைத்ததைப் போல் ஏனைய இடங்களிற் கிடைத்ததாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணக்கோட்டை, ஊர்காவற்றுறைக்கோட்டை, நாரந்தனை ஆகிய இடங்களில் ஓரிரு சோழச் சாசனங்களும், விக்கிரகமும், நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைகளை அடிப்படையாக வைத்து அவ்விடங்களில் ஏற்பட்ட சோழர்கால ஆட்சியின் முக்கியத்துவத்தைப் பூரணமாக அறியமுடியவில்லை. ஆனால் அண்மையில் பூநகரிப் பிராந்தியத்தில் சோழராட்சி தொடர்பாகக் கிடைத்த பல சான்றுகள் சோழத் தொடர்பால் சோழர் ஆட்சியால் பூநகரிப் பிராந்தியத்தில் ஏற்பட்ட வர்த்தகம், அரசியல், குடியேற்றம், பண்பாடு ஆகிய துறைகளின் முக்கியத்துவத்தை அறிய உதவுகின்றன.
 
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இலங்கை-தென்னிந்தியத் தொடர்பிற்கு மாதோட்டம் முக்கிய துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டதை இரு நாட்டு இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. ஆனால் பத்தாம் நூற்றாண்டில் சோழர் அநுராதபுரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் முக்கியத்துவம் படிப்படியாக வீழ்ச்சியடைந்ததை இவ்விலக்கியங்கள் மட்டுமன்றித் தொல்பொருட்சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
 
சோழர் ஆட்சிக்காலத்தில் இருந்து மாதோட்டத்தோடு ஊர்காவற்றுறை முக்கிய துறைமுகமாகப் பயன்படுத்தப் பெற்றது. பத்தாம் நூற்றாண்டில் வட இலங்கை மீது (நாகதீபம்) படையெடுத்த தென்னிந்திய மன்னன் (இரண்டாம் பராந்தக சோழன்) தனது படைகளை ஊர்காவற்றுறை யூடாகக் கொண்டு வந்தான் எனக் கூறப்படுகின்றது.
 
11ஆம் நூற்றாண்டிற் பொலநறுவையில் ஆட்சிசெய்த முதலாம் விஜயபாகு (கி.பி. 1070-1110) இத் துறைமுகத்தினூடாகத் தென்னிந்தியாவுடனும், தென்கிழக்காசிய நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபட்டான் எனக் கருதப்படுகின்றது 12ஆம் நூற்றாண்டிற் பொலநறுவையில் ஆட்சிபுரிந்த முதலாம் பராக்கிரமபாகு (கி.பி. 1153-1186) பர்மாவுடன் மேற் கொண்ட யானை வர்த்தகம் இத்துறைமுகத்தினூடாக நடந்ததை நயினாதீவிற் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ச் சாசனம் உறுதிப்படுத்துகிறது. இதே காலப்பகுதிக்குரிய தென்னிந்திய திருவாலங்காட்டுக்குச் சாசனம் ஒன்று(கி.பி. 1163-1173) சோழர் வடமேற்கிலங்கையில் வெற்றிகொண்ட இடங்களாக ஊர்காவற்றுறையுடன் மட்டிவாழ், புலச்சேரி, மாதோட்டம் முதலிய இடங்களையும் கூறுகின்றது  இச்சான்றுகள் அனைத்தும் மாதோட்டத்தின் பின்னர் இலங்கை-தென்னிந்தியத் தொடர்பில் ஊர்காவற்றுறை பெற்ற முக்கியத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன. ஆயினும் ஊர்காவற்றுறையுடன் கிழக்கே நேரெதிரேயுள்ள பூநகரியில் உள்ள சில இடங்களும் (மட்டிவாழ், புலச்சேரி ) சோழ சாசனத்திற் கூறப்படுவதால் சோழராட்சியில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், அரசியல், பண்பாடு முதலான தொடர்புகள் பெருமளவுக்கு ஊர்காவற்றுறை, பூநகரி ஊடாக நடத்தனவெனக் கருத இடமுண்டு.
 
பூநகரிக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே பாரம் பரியமாக இருந்து வந்த அரசியல், வர்த்தக உறவுகள் காரணமாக, தமிழ்நாட்டிற் காலத்திற்குக் காலம் தோன்றி வளர்ந்த பண்பாடு இலங்கையின் ஏனைய பாகங்களைப் பாதித்தது போல் இப்பிராந்தியத்தையும் பாதித்தது. இச்செல்வாக்கு வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) இருந்து பெருமளவுக்கு இடையீடின்றித் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் ஏற்பட்ட தென்பதைச் சமீப காலத்தில் இங்கு கிடைத்த பல தொல்லியற் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இது இப்பிராந்தியத்திற்குரிய தனிச் சிறப்பெனக் கூறலாம். இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 ஆம் நூற்றாண்டிலிருந்து எழுச்சி பெற்ற சோழவம்சமானது முன்னைய தமிழ்நாட்டு அரசவம்சங்களைக் காட்டிலும் தமிழ் நாட்டின் இயற்கையெல்லையைத் தாண்டிக் கடல் சார்ந்த பேரரசை அமைத்துக் கொண்ட போது சோழர்காலப் பண்பாடு முற்பட்ட காலங்களை விடக் கூடுதலாக இப்பிராந்தியத்தினுட் செல்வாக்குச் செலுத்தியிருக்குமென்பதிற் சந்தேகமில்லை.
 
சோழர்காலத்தின் பரந்த பேரரசுக் கோட்பாடும். கடல் கடந்த வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட பெருமளவு செல்வமும் நாட்டு ஆலயங்களை மையமாக தமிழ் வைத்து சைவப் பண்பாடு வளரக் காரணமாகின. 
 
இது தமிழ் நாட்டைமட்டும்மன்றி, சோழரது வர்த்தக அரசியல் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளையும் பாதித்தது. இலங்கையில் 77 ஆண்டுகால ஆட்சியில்தான் இதுவரை அரசமதமாக இருந்த பௌத்தம் வீழ்ச்சியடைய, சைவசமயம் அரச ஆதரவுடன் வளர்ச்சியடைந்தது. இதனால் இலங்கையின் முக்கிய நகர, வர்த்தக மையங்களில் சைவசமயம் சார்ந்த கட்டிட, சிற்ப ஓவியக் கலைகள் திராவிடக் கலை மரபை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்தன. இக்கலை மரபு இந்துக்கலைகளில் மட்டுமன்றி காலப்போக்கில் பௌத்தக் கலைகளிலும் செல்வாக்குச் செலுத்திற்று. 
 
1070 இல் இலங்கையின் ஆட்சியதிகாரத்தை இழந்த போதிலும் சோழர் அரசியலிலும், பண்பாட்டிலும் ஏற்படுத்தியிருந்த செல்வாக்கு, தொடர்ந்தும் நிலவியது. சோழரின் பின் ஆட்சிக்கு வந்த முதலாம் விஜயபாகு, பராக்கிரமபாகு, கஜபாகு போன்ற மன்னர்கள் தமது ஆட்சியைப் பாதுகாக்கத் தமிழர்கள் பலரை அமைச்சர்களாக, அதிகாரிகளாக, படைத்தளபதிகளாக வைத்திருந்தனர். இதனால் இம் மன்னர்கள் சைவசமயத்திற்கு ஆதரவாகவும் ஆட்சி செய்ய நேரிட்டது. இந்த ஆதரவைத் திருகோணமலையில் இருந்த சோழர் கால ஆலயங்கள் சிலவும் பெற்றதாகத் தெரிகிறது. ஆயினும் காலப்போக்கில் ஏற்பட்ட ஆட்சிமாறுதல்களும், அன்னியரின் கலையழிவுக் கொள்கையும் சோழர் கால ஆலயங்கள் உட்பட பழமையான பல ஆலயங்கள் அழிந்துபோகக் காரணமாகின. இது பூநகரிக்கும் பொருந்துமென்பதை மண்ணித்தலை பல்லவராயன் கட்டு, ஈழஊர் ஆகிய இடங்களில் உள்ள கட்டிட சிற்ப அழிபாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
 
* தமிழிலக்கியங்களும் பூநகரியும்
 
யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பாக எழுந்த தமிழிலக்கியங்களில் ஒன்றான யாழ்ப்பாண வைபவமாலை கி.பி. 8ஆம் நூற்றாண்டளவில் (கி.பி.745) விஜயனின் உறவினனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புர வல்லியைத் திருமணம் செய்து சிறிதுகாலம் கதிரமலையிலிருந்து ஆட்சி செய்ததன் பின்னர் தலைநகரைச் செங்கடகல நகரிக்கு மாற்றியதாகக் கூறுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் சிலர் இக்கதையில் வரும் சம்பவங்கள் மகாவம்சத்தில் வரும் விஜயன் குவேனி கதையின் மறுவடிவம் எனக்கூறி இதில் எதுவித வரலாற்று உண்மையும் இல்லையெனக் கூறுகின்றனர். இக்கதையில் சில பழைய வரலாற்றுக் கதைகளும் இணைந்து உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. 
 
18ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவ மாலை எழுந்தபோது சோழப் பேரரசின் ஆட்சி இலங்கையிலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்கவில்லை அதேவேளை, 600 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த அப்பேரரசின் சாதனைகளை அறிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு இக்காலத்தில் (18ம் நூற்றாண்டு) வரலாற்று ஆய்வுகள் வளர்ந்திருக்கவுமில்லை. அப்படி இருந்தும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரசின் தோற்றத்தைச் சோழவம்சத்தோடு தொடர்புபடுத்தி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றதென்றால் தமிழரது வரலாற்றில் சோழரைப் பற்றிய வரலாற்று நினைவுகள் (Historical memory) ஆழமாகப் பதிந்திருந்ததே காரணம் எனலாம். ஆயினும் இச்சோழ வம்சத்தின் தொடர்போடு கதிரமலையிலிருந்த (கந்தரோடை) ஆட்சி மையம் வேறோர் இடத்திற்கு மாறியதை ஏகோபித்த நிலையில் தமிழ் இலக்கியங்கள் சூசகமாகத் தெரிவிக்கத் தவறவில்லை. அந்த இடமாற்றம் பூநகரியில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இக்கருத்தை ஏற்ற பேராசிரியர் சிற்றம்பலம் இதற்கு யாழ்ப்பாண வைபவமாலையிலும் வையாபாடலிலும் வரும் குறிப்பை எடுத்துக் காட்டுகிறார் 
 
யாழ்ப்பாண வைபவமாலைபில் கதிரமலையிலிருந்து ஆட்சி செய்த உக்கிரசிங்கராசன் சிறிது காலத்தின் பின்னர் தலைநகரைச் செங்கட நகரிக்கு மாற்றி அங்கிருந்து ஆட்சிசெய்தான் எனக்கூறுகிறது.இத் தலைநகர் மாற்றம் வன்னிப் பிராந்தியத்திற்கு இடம்பெயர்ந்ததை வையாபாடலில் வரும் குறிப்பு உறுதிப்படுத்துகின்றது. அக்கூற்று பின்வருமாறு:
 
பொன்னகர் நிகருங் கதிரையம் பதியிற் போயரன் மகவினை வணங்கிப் பின்னருக் கிரம சிங்கசே னன்றன் பெண்ணென விருந்தன தைற்பின்
 
மன்னவ னடங்காப் பற்றினி லேகி மாநகர் வாவெட்டி மலையிற் றன்னிக ரற்ற மண்டப மியற்றித் தன்னர சியற்றின னிருந்தான்.
 
இதில் வாவெட்டி பற்றிவரும் செய்தி
 
பிற்கால வரலாற்றுச் சம்பவமாக இருப்பினும் அதில் பழைய வரலாற்றுக் கதைகளும் இணைந்துள்ளன எனக்கூறலாம். இவ்விரு இலக்கியங்களை அடிப்படையாக வைத்துக் கதிரமலையின் பின்னர் தலைநகர் வன்னிக்கு மாறியதென எடுத்துக்கொள்ளலாம். அந்த மாற்றம் பூநகரியில் இருந்த இராசதானியைக் குறித்ததென எடுத்துக்கொள்ளலாம். பூநகரியிலுள்ள கட்டிடங்களைக் கதிரமலையின் பின்னர் ஏற்பட்ட புதிய இராசதானியாகக் கொண்டால் அதற்கொரு பெயர் இருந்திருக்கும் என்பதிற் சந்தேகமில்லை. அது எப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டதென்பதே அடுத்து எழும் கேள்வியாகும்.
 
* சிங்கையும் பூநகரியும்
 
ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்களது ஆட்சிக்கு உட்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்பத்தலைநகர் சிங்கை, சிங்கைநகர், சிங்க நாடு எனச் செகராசசேகரம் போன்ற நூல்களும் யாபாபட்டுன (யாழ்ப்பாணம்) எனச் சிங்கள இலக்கியங்களும், நல்லூர் எனக் கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, தஷ்ண கைலாயமாலை போன்ற நூல்களும் கூறுகின்றன. இதில் சிங்கை ஆரம்பத் தலைநகராக இருந்ததை, காலத்தால் முந்திய இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. எனினும் தற்போது நல்லூரைத் தவிர ஒரு இராசதானிக்குரியதெனக் கருதக்கூடிய கட்டிட அழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் வேறு எந்த இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 16ஆம் நூற்றாண்டிற் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வந்த போது நல்லூர் நகரத்தையே கண்டனர் என அறிகின்றோம். இது சம்பந்தமாக, போர்த்துக்கேய மதகுருவான கேய்றோஸ் பாதிரியார் கூறியது கவனிக்கத்தக்கது:
 
நல்லூரைவிட வேறு நகரம் ஒருபோதும் அவர்களுக்கு இருக்கவில்லை. இது போத்துக் கேயருடைய பட்டினமும், அங்காடியும் அமைந்துள்ள இடத்திலிருந்து அரை லீக் (ஏறக்குறைய 1 1/2 மைல்) தூரத்தில் இருக்கிறது. )
 
அவர் குறிப்பிடுகின்ற பட்டினமும், அங்காடியும் தான் பிற்பட்ட காலத்தில் யாழ்ப்பாண நகரமாக மாறியது இதனால் யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரையும், யாப்பாபட்டுணத்தையும் இருவேறு இடங்களில் இருந்த தலைநகராகக் கொள்ளாது யாழ்ப்பாணத்தை நல்லூர் நகரின் ஒரு பாகமாகக் கொள்வது பொருத்தமாகும். நகர் எது? அப்படியாயின் ஆரம்பகாலச் சிங்கை 1450 இல் செண்பகப் பெருமாள் நல்லூரைத் தலைநகராகக் கொள்ளும் வரை சிங்கையே ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்களின் தலைநகர் எனவும், அது வல்லிபுரத்தில் இருந்ததெனவும் இராசநாயகம் கூறுகிறார்.இவர் கருத்தை ஏற்ற ஞானப்பிரகாசர் அதற்குச் சார்பாக அப்பிராந்தியத்திற் கிடைத்த தொல்லியற் சின்னங்களை எடுத்துக் காட்டினார். ஆனால் இவற்றை அப்பிராந்தியத்தில் ஆதிக் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகளாகக் கொள்ளலாமே தவிர ஓர் இராசதானிக்குரிய ஆதாரங்களாகக் கொள்ளமுடியாது. இவ்வாறான தொல்லியற் சின்னங்கள் வல்லிபுரத்தில் மட்டுமன்றி, கந்தரோடை, ஆனைக்கோட்டை, களபூமி, பூநகரி போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன.
 
இந்திரபாலா, பத்மநாதன் போன்ற அறிஞர்கள் யாழ்ப்பாணத்தைப்போல் சிங்கையையும் நல்லூருக்குள் அடங்கியிருந்த தலைநகராகக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகச் சில சான்றுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. 1435இற் பொறிக்கப்பட்ட விஜயநகர மன்னர்களது திருமாணிக்குழிக் கல்வெட்டில் யாழ்ப்பாணாயன் பட்டினமும், 1449க்கும் 1454க்கும் இடைப்பட்ட அரசகேசரி பராக்கிரம பாண்டியன் கல்வெட்டில் சிங்கையும் குறிப்பிடப்பட்டுள்ள 
 
* பூநகரிபல்லவராயன்கட்டும் பல்லவராய மன்னனும் 
 
பூநகரி தியாக்குளத்தின் தென்னெல்லையிற் பல்லவராயன் என்ற கிராமமும், இதற்குத் தெற்கே மண்ணியாற்றின் பிரதான ஆறு பல்லவராயன் ஆறு எனவும், இதன் அயற்கிராமம் பல்லவராயன் கட்டு எனவும் அழைக்கப்படுகின்றன. சோழராட்சியிற் பல்லவராயன் என்ற பெயரில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், படைத்தளபதிகள் எனப் பலர் இருந்துள்ளனர். இவர்களுக்குச் சோழ மன்னர்களால் வழங்கப்படட கிராமங்கள், ஊர்கள், நிலங்கள் இவர்களின் பெயர்களாலேயே பெரும்பாலும் குறிக்கப்பட்டன. 
இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்லவராயன் பேட்டை, பல்லவராயன்சாலை, பல்லவராயளந்தம், பல்லவராய நெந்தில், பல்லவராயர் போன்ற இடப்பெயர்கள் பல சோழர் காலத்துடன் தொடர்புடையன இப்பெயர் கொண்ட சோழ அதிகாரிகள், படைத்தளபதிகள் இலங்கையில் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்களுண்டு 
 
இரண்டாம் இராசாதிராசசோழன் ஆட்சியில் வடமேற் இலங்கையிலுள்ள மாதோட்டம், மட்டிவாழ் (பூநகரி மட்டு வில்நாடு), புலச்சேரி(பூநகரி புலையர்குடா) ஆகிய இடங்களை வெற்றிகொண்ட சோழப்படைத்தளபதி பெயர் பல்லவராயன் எனப் பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகிறது. பொலநறுவை இரண்டாம் சிவதேவாலயத்திற் கிடைத்த கல்வெட்டு ஒன்று சோழர்கால நிர்வாகத்தில் உயர்பதவி வகித்த அதிகாரியாகப் பல்லவராயன் என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.  இவ்வொற்றுமைகளை நோக்கும்போது பூநகரியில் உள்ள பல்லவராயன், பல்லவராயன்கட்டு என்ற இடப்பெயர்கள் சோழ அதிகாரிகள், படைவீரர்கள் பெயரால் ஏற்பட்டன எனக்கருத இடமுண்டு. இவ்விரு இடங்களும் சோழர் வெற்றிகொண்ட மட்டிவாழ் (மட்டுவில்நாடு), புலச்சேரி (புலையர் குடா) ஆகிய இரு இடங்களுக்குக் கிழக்கெல்லையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பூநகரி மண்ணில் வரலாற்றுக் காலத்தில் பல்லவராயன் என்ற அரசன் இருந்துள்ளான் அவர்பெயரில் ஊரும், பல்லவராயன்கட்டு நீர்ப்பாசனத்திற்காக  குளமும் உண்டு என்பதை மறுதளிக்கவும் முடியாது .
 
பூநகரி- பல்லவராயன்கட்டுப் பகுதியில் ஆதிகாலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதற்கான பல தடயங்கள் காணப்படுகின்றன.உதாரணமாக  பல்லவராயன்கட்டு விஷ்ணு சிலை பல வருடங்களுக்கு முன்னர் பல்லவராயன் கட்டுப் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதி யொன்றில் பயிர்ச்செய்கைக்காக நிலம் திருத்தப்பட்ட போது மண்ணிற் புதையுண்டிருந்த கருங்கற்சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அங்குள்ள ஆலயம் ஒன்றில் வைத்துவழிபட்ட இச்சிலை பின்னர் சம்புவெளியில் இதற்கெனப் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தில் வைக்கப்பட்டு, தற்பொழுது சம்புவெளி ஐயனார் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகிறது. இங்கு வாழும் மக்களிடையே ஐயனார் வழிபாடு செல்வாக்குப் பெற்றிருப்பதாைலும்,இச்சிலையின் சில உறுப்புக்கள் தெளிவற்றிருப்பதினாலும் இதை ஐயனார் சிற்பமாகவே இங்குள்ள மக்கள் கருதுகின்றனர். ஆனால் இது ஒரு விஷ்ணு சிலை என்பதை இச்சிலையின் இடது சுரத்தில் சங்கும், வலது கரத்தில் சக்கரமும் இருப்பதைக் கொண்டு இலகுவாக அடையாளம் காண முடிறகிது. 3 3/4 அடி உயரமும் 1 அடி அகலமும் (தோள்மூட்டுப் பகுதி) கொண்ட இச் சிற்பம் ஒரு வகை வெண்மையான கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக (இரு பரிமாண நிலை) செதுக்கப்பட்டுள்ளது தாமரைப் பீடத்தில் நிற்கும் நிலையில் அமைந்த இச்சிலையின் சில பாகங்கள் சிதைவடைந்து காணப்பட்டாலும் முக்கியமான அம்சங்களைத் தெளிவாக காணமுடிகிறது. தலையின் பின்னால் அமைந்த ஒளிவட்டமும், தலையின் உயரமான திருமுடியும், காதில் உள்ள மகர குண்டலமும், ஸ்ரீ வற்சாவாலும் சிறப்பான அம்சங்களாக குறிப்பிடத்தக்கன. 
 
பொதுவாக விஷ்ணு சிற்பத்தில் காணப்படும் நான்கு சுரங்களுக்குப் பதிலாக இதில் இரண்டு கரங்கள் காணப்படுவதைக் கொண்டு இச்சிற்பம் மிகப் பழமையானதென்பதை நிச்சயப்படுத்த முடிகின்றது. இரண்டு சுரங்களுடன் கூடிய சிற்பங்களை ஆக்கும் மரபு பல்லவ, சோழக்கலை மரபிற் பின்பற்றப்பட்ட ஒரு அம்சமாகும். இதற்கு, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள விஷ்ணு சிற்பம் சிறந்த ஒரு உதாரணமாகும். இச் சிற்பத்திற்கும் பல்லவராயன் கட்டுப் பகுதியில் கிடைத்த சிற்பத்திற்கும் இடையே அமைப்பு, கலைமரபு, தொழில் நுட்பம் என்பனவற்றில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. இச்சிற்பத்திற் காணப்படும் ஒளி வட்டம், நீண்ட முகபாவம், தடித்த உதடுகள், கமலகுண்டலம், மெலிந்த உடல் அமைப்பு, முழங்கால்வரை நீண்ட வட்டமான ஆடையமைப்பு என்பன சோழக்கலையிற் காணப்படும் சிறப்பம்சங்களாகும். 
 
இப் பல்லவராயன் கட்டுப் பிரதேசத்தைச் சோழருடன் தொடர்புபடுத்த வேறு சில ஆதாரங்களும் இருப்பதினால் இச் சிலை காணப்பட்ட இடத்தில், சோழர் கால ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு இதனால் இக்கட்டிட அழிபாடுகள் எக்கால கட்டத்திற்குரியதெனத் திட்டவட்டமாக தற்போது கூறமுடியாதிருக்கிறது. ஆனால் இதன் சுற்றாடலில் உள்ள இடப்பெயர்களை நோக்கும் போது இக்கட்டிட அழிபாடுகளைப் பாண்டியர். சோழர் காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடமுண்டு. இக்கட்டிட அழிபாட்டிற்கு மேற்கே இரண்டாம் இராசாதிராச சோழனின் படைத்தளபதியான பல்லவராயன் வெற்றி கொண்ட புலைச்சேரியும் (புலையர்குடா). கிழக்கே இத்தளபதி பெயரை நினைவுபடுத்தும் பல்லவராயன் கட்டும். தெற்கே பாண்டியர் தொடர்பைக் காட்டும் வீர பாண்டியன் முனை என்ற பெயரிலுள்ள கிராமமும் அமைந்துள்ளன. இக்கட்டிட அழிபாட்டிற்கு முன்னால் வெள்ளைப் பள்ளம் என்ற இடம் உள்ளது. தற்போது அங்கிருக்கும் ஆலயம் ஈழவூர் வெளி வெள்ளைப்பள்ளத்து பிள்ளையார் என அழைக்கப்படுகிறது. சோழரின் தலைநகராக இருந்த தஞ்சாவூரின் முக்கிய இடங்களில் வெள்ளைப்பள்ளம் என்ற இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. வொற்றுமைகளை நோக்கும் போது இங்குள்ள இவ் ஆலய அழிபாட்டை சோழர்காலத்துடன் தொடபுர்படுத்தலாம் போல் தெரிகிறது. எவ்வாறாயினும் இப்பகுதியில் முழுமையான ஆய்வு மேற் கொள்ளப்படுமாயின் ஈழ ஊர் தொடர்பாக பல வரலாற்று உண்மைகள் வெளிவர இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை. பாலியாற்றுடன் இணைந்த பல்லவராயன்கட்டு ஆற்றை அடுத்துள்ள நாகபடுவானிற் சோழர்காலச் சாசனத்துடன் கூடிய நாகபட்டினக் கலை மரபுக்குரிய விக்கிரமும். இதற்கு வடக்காகப் பல்லவராயன் கட்டிற் சோழர்கால விஷ்ணு சிலையும் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் கோயிற் காட்டிற் சோழர்கால ஆலயமொன்று இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை மேலும் வலுவடையச் செய்கின்றன.
 
"பல்லவராயனன் - வஞ்சிநகர் வேளாளனும், கல்விமானுமாகிய பல்லவனையும், அவனுறவினராகிய இரு பிரபுக்களையும் செந்நெல் விளையும் கழனிகள் விளங்கும் வெளிநாடென்னும் பல்லவராயன்கட்டு முதலிய இடங்களுக்கு அதிபதியாக்கினான்". சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து வந்த பிரபுக்களை அவரவர் அடிமை குடிமைகளுடன், மேற்கூறிய இடங்களில் குடியிருத்திய பின் நான்கு திசைகளுக்கும் நான்கு சேனைகளைக் காவலாக நிறுத்தி மேற்றிசைச் சேனைக்கு வல்லியமாதாக்கனென்னும் பராக்கிரமவீரனையும், கீழ்த்திசைச் சேனைக்குச் சண்பகமா தாக்கனென்னும் வீரசூரனையும், வடதிசைச் சேனைக்கு உத்தண்டகெம்பீர வீரனாகிய இமையாணனென்னும் மாதாக்கனையும், தென்திசைச் சேனைக்கு வெற்றிமாதாக்கன் என்னும் விசயபராக்கிரமனையும் சேனாபதிகளாக்கி வீரசிகாமணியாகிய வீரசிங்கயனைச் சர்வசேனைக்கும் நாயகமாக்கியின்னும் வேண்டுமிடங்கடோறும் கசரததுரக பதாதிகளை நிறுத்திப் புறமதிலுங் கட்டுவித்துச் சுபமுகூர்த்தத்தில் மகுடாபிஷேகம் பெற்று புவனேகவாகு என்னும் மந்திரியுடன் நகர்வலம் வந்து நவரத்தினங்க எழுத்திச் செய்யப்பட்ட சிங்காசனமேறி அரசியல் தொடங்கிச் செங்கோன் முறை குன்றாது நல்லரசு புரிந்து வந்தான் எனும் குறிப்பு யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் காணப்படுகின்றது
 
தமிழ் மாமன்னன் பல்லவராயன். ஈழத்தில் தமிழர்களின் ஆட்சி உரித்தையும், தொன்மையையும் எடுத்தியம்பும் வரலாற்றுச் சான்றுகள் ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னர்களின் ஆட்சிச் சிறப்புக்களாலும் கட்டமைக்கப்படுகின்றன இதனடிப்படையில் வன்னிப்பேரரசின் வழிவந்த குறுநில மன்னர்களுள் ஒருவனாக, பதினெண் தொழில்சார் குடிமக்கள் சகிதம் வன்னியின் பூநகரியை ஆண்ட பல்லவராய மன்னன் சிறப்புப்பெறுகிறான். 
 
அவனது ஆட்சி எல்லையாக வடக்கே மண்டைக்கல்லாறும், தெற்கே முழங்காவிலும், கிழக்கே வன்னேரியும், மேற்கே பொன்னாவெளியும் வரையறுக்கப்படுகின்றன. பல்லவராயனது ஆட்சிக்காலத்தில் வடபகுதியான அரசபுரம் என்னும் நிலப்பரப்பை அல்லிராணி என்னும் அரசியும், மாந்தையெனும் நிலப்பரப்பை கரிகாலன் என்னும் சிற்றரசனும் ஆட்சி புரிந்ததாக அறியமுடிகிறது. 
 
உழவுத்தொழிலை முதன்மைப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த பல்லவராய மன்னனின் ஆட்சி,  அத்தொழில் சார்ந்த பிற பதினெட்டு தொழில்களையும் முதன்மைப்படுத்திய மிகச்செழிப்புற்ற ஆட்சியாக அமைந்திருந்தது.  அதற்கு ஆதாரமாக பூநகரி, பல்லவராயன்கட்டு மற்றும் அதன் சுற்றயல் பகுதிகளில் அத்தொழில்களின் பெயரில் இன்றளவும் காணப்படும் கொல்லங்குளம், பத்தன்குளம், நாகபடுவான் குளம், கரியாலைக்குளம், பண்டிவெட்டிக்குளம்,வில்வெட்டிக்குளம், தேவன்குளம்,வன்னேரிக்குளம், மண்ணியாகுளம்,அம்பலப்பெருமாள்குளம், பூதவுடையார் புளியங்குளம், கரம்பைக்கட்டுக்குளம், வண்ணாம்பிட்டிக்குளம், நாச்சியார்குளம், பன்னாமோட்டைக்குளம், சின்னவன் முறிப்புக்குளம், பல்லவராயன்கட்டுக்குளம் என்பவற்றைக் குறிப்பிடலாம். 
 
இதுதவிர, வலைப்பாட்டுப் பகுதியிலுள்ள வீரபாண்டியன்முனை, அவ்விடத்தே வழக்கிலுள்ள "ஈழ ஊர்" எனும் தொன்மைப் பெயர், வடபூநகரியின் நாகதேவன் துறை, கெளதாரிமுனை, மண்ணித்தலை சிவன் கோயில் உள்ளிட்ட தொன்ம அடையாளங்களுக்கும் பல்லவராய மன்னனுடைய ஆட்சிக்கும் இடைத்தொடர்புகள் இருப்பதையும் காணமுடியும். 
 
ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல குளங்களை அமைத்து அவற்றுக்கு ஏற்ப பணிகளையும் விஸ்தரித்து பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் தொழிற் பாதுகாப்புக்குமான ஒரு அடித்தளத்தை அந்தக்காலத்துக்கு ஏற்றாப்போல் கட்டமைத்து ஆட்சி நடைபெற்ற ஊராக பல்லவராயன்கட்டும் அதன் ஆட்சியாளனான பல்லவராய மன்னனும் வன்னியர் ஆட்சி வரலாற்றில் முதன்மை இடம் பெற்றுள்ளனர். 
 
ஆன்மீகச் சிறப்புப்பெற்றதும் சிற்ப மற்றும் கட்டடக்கலையில் சிறப்புப் பெற்று இருந்ததுமான பல்லவராயன்கட்டு காட்டுப்பிள்ளையார் ஆலயம், வன்னேரிக்குளம் ஐயனார் ஆலயம் என்பவை பல்லவராய மன்னனால் ஆதரிக்கப்பட்ட ஆலயங்கள் என சுட்டிச்சொல்லப்படுகின்றன. 
பல்லவராய மன்னனின் கோட்டையின் சிதைவுகள் சுண்ணாவில், பல்லவராயன்கட்டு மற்றும் முழங்காவில் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
 
இவ்வடிப்படையிலான பல்லவராய மன்னனது ஆட்சிச்சிறப்பினை, எண்பதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் திரு.பரமு புஸ்பரட்ணம் அவர்களால் பொன்னாவெளி புளியந்துறைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவும் கிடைக்கப்பெற்ற எச்சங்களும் எடுத்துக்காட்டுகின்றன. அதுபோலவே, நாகபடுவான், குஞ்சுப்பரந்தன், அக்கராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மீட்கப்பட்ட நாணயங்கள் உள்ளிட்ட எச்சங்களும் இதனையே எண்பிக்கின்றன. 
 
ஆக, ஈழத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தையும் ஆட்சியுரித்தையும், தொன்மத்தையும் பறைசாற்றும் வகையிலமைந்த பல்லவராய மன்னனின் வரலாற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தும் முயற்சியாகவே, பல்லவராயன்கட்டுச் சந்தியில், பல்லவராய மன்னனின் சிலை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் 2023.06.05 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது
 
தொகுப்பாக்கம்
கந்தசாமி கிரிகரன் 
Kanthasamy Kirikaran 
ஈழத்து வரலாறும் தொல்லியலும் 
 
உசாத்துணை நூல்கள் 
1.பேராசிரியர் புஸ்பரட்ணம்.ப,1993 "பூநகரி தொல்பொருளாய்வு"  யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு,பக்59 - 156
 
2.வேலுப்பிள்ளை.க, 2004 "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" Asian educational services, பக் 15-16
 
3.புஸ்பரட்ணம்.ப, 2017 "இலங்கை தமிழர் ஒரு சுருக்க வரலாறு", தமிழ்கல்விச்சேவை சுவிட்சர்லாந்து,பக் 4-5, 104-107
 
4.கிருஷ்ணராஜா.செ,2012, "இலங்கை பண்பாட்டு பரிணாமத்தின் அடிப்படைகள்", AB creator & publishers, பக்170-171
 
5.சுந்தரலிங்கம்.க,2014, "வன்னி வரலாறும் பண்பாடும்" குமரன் பப்ளிர்ஸ், பக்1-39,59-73, 
 
6.கலாநிதி பத்மநாதன்.சி,2003, "இலங்கையில் வன்னியர்"குமரன் புத்தக இல்லம்,பக் 29-66
 
7.கலாநிதி பத்மநாதன்.சி,1970, "வன்னியர்"சைவப் பிரகாச அச்சியந்திரசாலை,பக்65-103
 
8.கேதீஸ்வரன்.றூ,2014, "கிளிநொச்சி மாவட்ட தொன்மையின் மூலங்கள்" மாவட்ட செயலகமும் பண்பாட்டுப் பேரவையும் கிளிநொச்சி, பக்95-127
 
(பிரதி - ஈழத்து வரலாறும் தொல்லியலும்)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வை இளைஞர்களிடையே தலைமத்துவப் பண்புகளை வளர்த்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2024 (சனிக்கிழமை)
கணபதி படிப்பகத்தின் 57 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2024 (வெள்ளிக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - சண்முகம் இரத்தினசாமி (குயில் அண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2024 (வியாழக்கிழமை)
சாதனை மாணவர்களுக்கான நடைபெற்ற பாராட்டுவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி மனோன்மணி கணேசநாதன் (ஜெகனின் தாயார்)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2024 (செவ்வாய்க்கிழமை)
7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2024 (செவ்வாய்க்கிழமை)
சாதனை மாணவர்களுக்கான பாராட்டுவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2024 (திங்கட்கிழமை)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகருடன் Dr. குருகுலராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2024 (திங்கட்கிழமை)
பிரதேச செயலகங்களிற்கான மெய்வல்லுனர் போட்டியில் வல்வை வீரர் மூன்றாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2024 (ஞாயிற்றுக்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது நினைவு கூரலை முன்னிட்டு பிரித்தானியா தமிழர் பேரவையின் மனித உரிமைகள் அணியின் செல்வி ஷர்மிளா வரதராஜா உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பிரதேச செயலகங்களிற்கான மெய்வல்லுனர் போட்டியில் வல்வை வீரர் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையின் நாடகத்துறை நாயகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2024 (வெள்ளிக்கிழமை)
கணித ஒலிம்பியாட் போட்டியில் கட்டைக்காடு மாணவிக்கு தங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2024 (புதன்கிழமை)
கோடை காலத்தில் பார்க்க வேண்டிய 3 இடங்களில் ஒன்றாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - வேலுச்சாமி தங்கேஸ்வரியம்மா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2024 (திங்கட்கிழமை)
Structural Genocide and Ethnic cleansing of Tamils in Srilanka
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2024 (ஞாயிற்றுக்கிழமை)
முன்னாள் வல்வை நகரசபை தலைவர் செல்வேதிராவின் தமிழர் பிரச்சனை தொடர்பான நூல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2024 (ஞாயிற்றுக்கிழமை)
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் கடலியல் சார் கற்கை நெறிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2024 (சனிக்கிழமை)
உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் - ஐ.நா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2024 (வெள்ளிக்கிழமை)
அறநெறிப் பாடசாலை கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2024 (சனிக்கிழமை)
சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2024 (வியாழக்கிழமை)
அமரர் திரு அம்பிகைபாகர் வேதவனம் - ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2024 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai