வல்வையைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவர் கடன் தொல்லை காரணமாக படகு மூலம் தனுஸ்கோடி சென்றுள்ளார்?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவர் கடன் தொல்லை காரணமாக தனது பேரப்பிள்ளைகளுடன் தலைமன்னாரிலிருந்து படகு மூலம் தமிழகத்தின் தனுஸ்கோடிப் பகுதியிலுள்ள அரிச்சமுனையைச் சென்றடைந்துள்ளதாக நேற்று இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பிட்ட செய்தி பின்வருமாறு,
கடன் தொல்லையால் இலங்கையிலிருந்து தனது மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுடன் தனுஸ்கோடி அரிச்சமுனையில் வந்திறங்கிய பெண்ணிடம் கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் சசிலியாமா கிரேட். இவரது மகள் மற்றும் மருமகன் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் பெற்றுள்ளனர். அதனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், சசிலியாமா கிரேட்டிடம் தங்களது 2 குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு தலைமறைவானவர்கள்.
இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் சசிலியாமா கிரேட்டிடம் தொடர்ந்து கடனைக் கேட்டு மிரட்டியாதாக கூறப்படுகின்றது. இதனால் அச்சமடைந்த அவர், தனது பேரக் குழந்தைகளான ஜாக்கி, ஜெக்சன் ஆகிய இருவருடனும் தலைமன்னாரில் இருந்து படகின் மூலம் தனுஸ்கோடி அரிச்சமுனையில் வந்து இறங்கினர்.
அவர்கள் மூவரும் கியூ பிரிவுப் பொலிசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
விசாரணையின் போது பல ஆண்டுகளுக்கு முன் அகதியாக திருச்சியில் இருந்ததாகவும், தனது மகள் குழந்தைகளைக் காப்பாற்றவே இந்திய அரசை நம்பி வந்ததாகவும் சசிலி யாமா கிரேட் தெரிவித்தார்
மேற்கண்டவாறு குறிப்பிட்ட பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.