ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2022 (வெள்ளிக்கிழமை)
ஒமிக்ரோன் திரிபு நாட்டில் மிக வேகமாக பரவி வருவதினால் ,இந்த நோய் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெறுவோர் நோய் நிலைமை மோசமடையாதிருக்க உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உடல் நல சிகிச்சை நிபுணர் (Physiotherapist ) சரத் காமினி டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தவறான அறிவுரைகளால் நோய் நிலைமை மோசமடைகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒமிக்ரோன் நோயின் சில அறிகுறிகள் மாறுபட்டவை . இந்த அறிகுறிகள் பொதுவான வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளைப் போன்றதாக இருக்கக்கூடும். காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல்வலி மற்றும் சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படும். இந்த நிலைமை ஏனைய நோய் ஏற்பட்டால் அதில் இருந்து எவ்வாறு நாம் வழமை நிலைமைக்கு திரும்புகின்றோமோ அதேபோன்ற நிலைமை இதிலும் ஏற்படக்கூடும்.
முக்கியமாக ஓய்வெடுப்பது இதற்கு மிகவும் அவசியம். நோய் நிலைமை காணப்படுமிடத்து, கடினமான வேலைகளில் ஈடுபடாமலும் அங்குமிங்கும் அலைந்து திரியாமலும் ஓய்வாக இருப்பது அவசியம்.. முடிந்தவரை அதிகளவான நீர் ஆகாரங்களை உணவுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வயதானவர்கள் வழமையைவிட நாளொன்றிற்கு ஆகக்குறைந்தது இரண்டு லீற்றர் நீர் ஆகாரத்தையேனும் உண்ண வேண்டும். இந்த நோய்க்கு விசேட உணவு வகைகளை உட்கொள்ள தேவையில்லை. வழமைபோன்று பொதுவான உணவு வகைகளை உட்கொள்வது போதுமானது. பெரும்பாலானவர்களுக்கு தொண்டை வலி இருப்பதால் ஒரு கிளாஸ் தண்ணீரில் அளவு உப்பை சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.
மருந்து வகைகளை பயன்படுத்துவதிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். உடல் வலிகளுக்கு பெரசிட்டமோல் மிகவும் பொருத்தமான மருந்து. சிலர் இதற்காக பெரசிட்டமோல் (Paracetamol) மற்றும் Codeine ஆகிய இரண்டு மருந்துகளும் அடங்கிய டீன் என்று முடிவடைகின்ற ரெப்பிடீன், பெனடீன் ஆகிய மருந்து வகைகளை பயன்படுத்துகின்றனர். பெரசிட்டமோலை பயன்படுத்தியும் காய்ச்சல் மற்றும் உடல்வலி குறைவடையாதபட்சத்தில் மாத்திரமே இவ்வாறான Codeine அடங்கிய மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டும். Codeine சில அடங்கிய வகை சிலருக்கு மலச்சிக்கல் மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகின்றன. சளி இருந்தால் பிரிட்டன் மாத்திரை ஒன்றை எடுத்தால் போதுமானது. விட்டமின் சி, விட்டமின் டி மற்றும் துத்தநாக மருந்து வகைகள் Zinc drugs போன்ற மாத்திரைகள் இந்த நோய்க்காக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றும் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்தாகும்.
ஓமிக்ரோன் தொற்றினூடாக நோய் நிலைமை குறைவாக காணப்படுகின்றவர்களுக்கு Prednisolone வகையிலான மாத்திரைகள் அதாவது, Steroids மற்றும் Antibiotics ஆகியவற்றை பயன்படுத்துவது அவசியம் இல்லை. நோய் தாக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கே இந்த மருந்து வகைகள் அவசியமாகும். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தாலும், தொடர்ந்தும் அதிக காய்ச்சல், வாந்தி, அல்லது உணவு உண்பதில் சிரமம் காணப்படுமிடத்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.. தொற்றா நோய் உள்ளவர்கள், அதற்காக முன்னர் பயன்படுத்திய மருந்து வகைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உடல் நல சிகிச்சை நிபுணர் Physiotherapist சரத் காமினி டி சில்வா மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.